NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
க.சே.ரமணி பிரபா தேவி May 30, 2026 08:14 PM

2027ஆம் ஆண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தேசிய தேர்வு முகமை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு விதிகளில் மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை தேசிய தேர்வு முகமை தற்போது கொண்டு வர உள்ளது. அதன்படி, வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு முற்றிலும் கணினி வழியில் (Computer Based Test) கண்டிப்பாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.டி.ஏ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பேனா, காகித முறைத் தேர்வில் மோசடி

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இந்த ஆண்டுவரை நீட் தேர்வு காகிதம் மற்றும் பேனா முறையில் ஓ.எம்.ஆர் தாள்களைப் பயன்படுத்தியே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளும் தொடர் மாணவர் போராட்டங்களும் வெடித்தன. கருணை மதிப்பெண் குளறுபடியும் கடந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது.

உயர்மட்டக் குழு அமைப்பு

இந்த நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இதில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் தேவையற்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பு உயர்மட்டக் குழுவை அமைத்திருந்தது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். 

இந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, நீட் தேர்வை கணினி முறைக்கு மாற்ற என்டிஏ அதிரடி முடிவு எடுத்துள்ளது. கணினி வழியில் தேர்வை நடத்துவதன் மூலம் வினாத்தாள் கசிவை நூறு சதவீதம் உறுதியாகத் தடுக்க முடியும் என்றும், தேர்வு முடிவுகளை மிக விரைவாகவும் எந்தவித பிழைகள் இல்லாமலும் சரியாக வெளியிட முடியும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அடுத்த ஆண்டு முதல்.. 

இருப்பினும், இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்தினால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நடைமுறைச் சிரமம் ஏற்படும் என்பதால், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வும் கணினிப் பயிற்சியும் வழங்க சிறிது கால அவகாசம் கட்டாயம் தேவைப்படுகிறது.

எனவே, முறையான விரிவான முன்னேற்பாடுகளுடன் 2027 ஆம் ஆண்டில் கணினி வழித் தேர்வை அறிமுகப்படுத்த என்.டி.ஏ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் முன்னிலையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.