தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என இரு முனை போட்டியானது ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்தது. அதே நேரம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவிப்பு வெளியிட்டது. தவெகவிற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை, அமைச்சரவையிலும் இடம்பிடிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நடைபெற்றது.
தேர்தல் முடிவிற்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, எந்த பேரத்திற்கும், பதவிக்கும் ஆசைப்படாத கட்சி தேமுதிக மட்டும் தான் என்பதை இந்த தேர்தலில் நிரூபித்துள்ளோம். எதற்கெடுத்தாலும் பேரம் பேரம் என தேமுதிக மீது குற்றம்சாட்டினார்கள். கேவலப்படுத்தினார்கள். உங்களுக்கான பதில் தான் இது.
பதவிக்காகவோ, ஒரு பணத்திற்கோ, ஒரு சோபா செட்டுக்கோ, பொட்டிக்கோ எதற்கும் ஆசைப்படாமல் நாம் பயணிக்கும் கூட்டணி தர்மத்திற்கோ, விசுவாசத்திற்கோ ஒரு சீட் இருந்தாலும் உண்மையாக இருக்கும் கட்சி தேமுதிக, நான் நினைத்திருந்தால் விஜய்யை போய் பார்த்திருக்க முடியாதா.? கட்சியினர் என்னுடன் வர மாட்டாங்களா.? இப்போது அமைச்சர் பதவிக்காக எல்லாம் ஓடுகிறார்கள். அமைச்சர் பதவி என்ன.? நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இது தான் உண்மை.
ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படுகிற கட்சி தேமுதிக இல்லை, என்றைக்கும் நாம் கொண்டுள்ள கொள்ளை, கூட்டணி தர்மத்திற்காக எடுத்துக்கொண்ட பாதையில் உறுதியாக இருப்போம் என்பதற்கு அத்தாட்சி தான் இது. தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, மக்கள் நல கூட்டணி என பயணித்தோம். எனவே ஒவ்வொரு கால கட்டத்திலும் கூட்டணி தர்மத்தை மதித்தவர்கள் தான் தேமுதிக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் யார் கூட்டணியில் துணை நின்றது. எல்லோரும் தங்களது சுய லாபத்திற்காக கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு ஓடினார்கள். ஆனால் தேமுதிக கூட்டணி தர்மத்தை மதித்தோம் அதிமுக கூட்டணியில் இருந்தோம். எங்களுக்கும் பாஜக கூட்டணியில் இணைய தெரியாதா.? ஆனால் கூட்டணி தர்மத்திற்காக மதித்து இருந்தோம் என பிரேமலதா தெரிவித்தார்.