தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் மக்களின் கூட்டம் நிரம்பியே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மற்ற நாடுகளை விட இந்திய மக்களே அதிகமாக தங்க நகைகளை விரும்பி வாங்குகிறார்கள். குறிப்பாக இந்திய திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்ப பிடிக்கிறது. மேலும் எதிர்கால சேமிப்பாக தங்கம் இருப்பதால் தங்க நகைகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பங்கு சந்தையில் நிலையற்ற தன்மையானது நீடித்து வருகிறது. இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்க நகைகள் மீது முதலீடு அதிகரித்துள்ளது. மேலும் டாலரின் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தங்க நகைகளை மத்திய வங்கிகள் டன் கணக்கில் வாங்கி குவித்து வருவதும் தங்கம் விலை உயர்விற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் வருடம் ஒரு சவரன் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான தங்கம் விலை இந்த வருடம் தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில், தங்கம் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.