Congress Slams PM Modi: தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை, CUET தேர்வு தொழில்நுட்பக் கோளாறு பிரச்னையால் தாமதமானது என, தேர்வு விவகாரங்கள் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சில தவறுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “ நாட்டில் வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஆனால் பிரதமர் நாட்டை ஒரு மாம்பழத் தோட்டமாக மாற்றுவதற்கான செய்முறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பெரிய சிபிஎஸ்இ புலனாய்வாளர்களால் கூட செய்ய முடியாததை, 19 வயது சிறுவன் ஹேக் செய்து முழு அரசாங்க அமைப்பின் தவறையும் தேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அண்மைக்கால பதிவுகள், காணொளிகள் அல்லது செய்திகளைப் பாருங்கள். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு கொண்டுள்ள மோடி மாம்பழ வகைகளைப் பட்டியலிடுகிறார். ஆனால். எதிர்க்கட்சியில் இருப்பவர் இளைஞர்கள் மீது அக்கறை காட்டுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நீட், CUET, ஜே.இ.இ மெயின்ஸ், BPSC மற்றும் எண்ணற்ற பிற தேர்வுகள் உட்பட பல தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இந்தப் பிரச்னை போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமானதாக இன்றி, இப்போது பள்ளிக் கல்வி வரை பரவியுள்ளது. முதலில் வாரியத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தன, பின்னர் போட்டித் தேர்வுகளில், இப்போது சேவைக் குழுக்களில். நரேந்திர மோடிக்கு உண்மையில் என்னதான் வேண்டும்? நாட்டின் இளைஞர்கள் எழுத்தறிவற்றவர்களாகவும், அறியாமையில் இருப்பவர்களாகவும், வேலையற்றவர்களாகவும் இருந்து, ஆர்.எஸ்.எஸ் கிளைகளுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறாரா?
பல இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து பிரதமர் பேசுவார் என்ற நம்பிக்கையில், நேற்று பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியைக் கேட்டேன். ஆனால் அதற்குப் பதிலாக, அவர் மாம்பழங்களின் வகைகள், ஜல்ஜீராவின் செய்முறைகள், மற்றும் கோடைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். பிரதமரின் தினசரி சமூக ஊடகப் பதிவுகளையும் பொது அறிக்கைகளையும், கடந்த ஒரு வாரமாக அல்லது பத்து நாட்களாக ராகுல் காந்தி பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும்: இந்த மனிதர் பிரதமராக இந்த நாட்டிற்குத் தகுதியானவரா? நமது இளைய தலைமுறை எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியின் மத்தியில், இந்தியப் பிரதமர் செய்ய வேண்டியது இதுதானா?
தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்பது போல, நான் படிக்க மாட்டேன், மற்றவர்களையும் படிக்க விடமாட்டேன் என பாஜக செயல்பட்டு வருகிறது. மோடி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் பதிவுகளையோ அல்லது ட்வீட்களையோ பாருங்கள், கல்வி முறையையோ அல்லது சிபிஎஸ்இ-யையோ கண்டித்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வினாத்தாள் கசிவு குறித்துக் கேட்டபோது, அவர், ராகுல் காந்தி விரக்தியில் இருக்கிறார் என பதிலளிக்கிறார். ஆம், உண்மைதான், ராகுல் காந்தி விரக்தியில் இருக்கிறார்.
காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது, நாடு முழுவதும் விரக்தியில் இருக்கிறது. நீங்கள் தற்போதைய தலைமுறையுடன் விளையாடுவதால் நாங்கள் அனைவரும் விரக்தியில் இருக்கிறோம்” என பவன் கேரா ஆவேசமாக பேசியுள்ளார்.