பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம்!
Dinamaalai June 01, 2026 04:48 PM

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில், தற்போது அதற்கான அவகாசத்தைத் தமிழக அரசு மேலும் சில நாட்களுக்கு அதிரடியாக நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, திட்டமிட்டபடி நாளை ஜூன் 2-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை அரசுத் துறைகளில் இருந்து ஆன்லைனில் பெறுவதில் பல மாணவர்களுக்குத் தாமதம் ஏற்பட்டது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், விண்ணப்பத் தேதியைச் சற்றே நீட்டிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறையிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தற்போது வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடம்  அதிகரித்துள்ளதை விண்ணப்பங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்காக தற்போதைய நிலவரப்படி மொத்தம் 2,81,052 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். வரும் ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தவறிய அல்லது சான்றிதழ் காரணங்களால் பாதியில் நிறுத்தி வைத்துள்ள மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி, tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஜூன் 5-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.