வரும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தையும், நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை பணிகளையும் முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இது இந்தியத் தேர்தல் வரலாற்றில் முன்மாதிரியான மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1976ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை ஃப்ரீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2001-ல் இந்தத் தடை 2026-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, 2026-ல் தடை முடிவடைவதால், புதிய மறுவரையறை செய்யப்பட வேண்டிய அரசியல் கட்டாயம் உள்ளது. இதற்கு அடிப்படையாகப் புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து தொடங்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதிய மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால், நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 750 முதல் 800 ஆக உயர அதிக வாய்ப்புள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த புதிய அரசியல் அமைப்பு மசோதாவைக் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்காண கோடி ரூபாய்கள் தேர்தல் செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தொகுதி மறுவரையறை திட்டத்திற்குத் தென்மாநிலங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. தேசிய புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்கள் தங்களின் மக்கள்தொகையைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற வடமாநிலங்களில் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புதிய தொகுதிகளைப் பிரித்தால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களின் உரிய பிரதிநிதித்துவத்தை நிரந்தரமாக இழக்க நேரிடும்.
மறுபுறம் வடமாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் பெருமளவு அதிகரிக்கும். உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 140-க்கும் மேல் கணிசமாக அதிகரிக்கலாம். ஆனால், தமிழகத்தின் 39 தொகுதிகள் எந்த உயர்வும் இன்றி அதே நிலையிலோ அல்லது அதைவிடக் குறையவோ அதிக வாய்ப்புள்ளது என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலக் கட்சிகள் சிலவற்றிடம் ஆதரவைக் கோர முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.