6 மாதங்கள் அமைதியா இருப்போம் என்று சொன்னவர்கள், 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியல, ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்தில் ஆரம்பிச்சிட்டாங்க என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் விஜய் முதன்முறையாக திருச்சி கிழக்கில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்
தேர்தல் ஆணைய விதிகளின்படிதான் நான் பெரம்பூர் எம்எல்ஏ, ஆனால் எனக்கு திருச்சி கிழக்கு மக்கள் எப்போதும் நெருக்கம்தான் என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஆட்சிக்கு வந்தபின் 6 மாதங்கள் அமைதியா இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியல, ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்தில் ஆரம்பிச்சிட்டாங்க; கல்யாண வீட்டில் எல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க என்று திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர் இப்போதும் சொல்கிறேன் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டியே இருவருக்கும் இடையில்தான் போட்டியே; தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இடமில்லை என்றார்.
வாக்களித்த மக்களை தற்குறி என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்களா? எங்களுக்கு போட்டால் கெட்டவர்களா
நீங்கள் தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள், இன்னமும் ஆக்குவார்கள். மக்களை புரிந்துவைத்திருந்தால் இப்படியெல்லாம் நீங்கள் பேசியிருக்க மாட்டீர்கள் என்றார்
சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் போதை கலாசாரம் பரவிக் கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் ஏன் தடுக்கவில்லை. அதைத் தடுத்திருந்தால் பெண்களுக்கு இவ்வளவு நடந்திருக்குமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு என் மீது பழி போடுவதா?
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று பேசினார்
தான் தற்போது அணியும் கோட் சூட் குறித்து சிலர் கிண்டலடிப்பதாக குறிப்பிட்ட விஜய், “ஏன் நாம எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா“ என கேள்வி எழுப்பினார். அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்க சக்திகளும் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா என கேட்ட அவர், அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்றும், தான் கலர் கலராக கோட் சூட் அணியவில்லை, இரண்டே கலர், நம் எல்லோருடைய மனதும் போலவே கருப்பு வெள்ளை என கூறினார்.
“எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான்“ என்று காண்பிக்கவே தான் அந்த கலரை அணிவதாகவும், அதில், அந்த கருப்பு யாரை குறிக்கும், எதை குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும் என்று முதல்வர் விஜய் விளக்கமளித்தார்.