'முதல்வரின் வேனில் இருந்து கீழே விழுந்த காவலாளி'.. CM விஜய் அதிர்ச்சி!
Dinamaalai June 01, 2026 08:48 PM

திருச்சி கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியில் தவெக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் திறந்த வாகனத்தில் பேரணி சென்று கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர், ஓடும் வாகனத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பிற்கு மத்தியில், முதல்வர் விஜய் திறந்த பிரச்சார வேனில் நின்றபடி கைகளைக் கூப்பியும், கைகளை அசைத்தும் நன்றி தெரிவித்துக் கொண்டே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார்.

முதலமைச்சரின் வாகனத்தைச் சுற்றி அலைகடலெனத் தொண்டர்கள் திரண்டிருந்ததால், வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதியில் நின்றபடி மிக நெருக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் பாதுகாப்புப் படை காவலர் ஒருவர், கூட்ட நெரிசலின் காரணமாக எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

தனக்கு மிக அருகில் பாதுகாப்பு அரணாக வந்த காவலர் திடீரென கீழே விழுந்ததைக் கண்ட முதலமைச்சர் விஜய் கடுமையான அதிர்ச்சியடைந்தார். சற்றும் தாமதிக்காமல், உடனடியாகப் பிரச்சார வாகனத்தை அதே இடத்தில் நிறுத்துமாறு  ஓட்டுநருக்குச் சைகை காட்டி அதிரடியாக உத்தரவிட்டார். வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த மற்ற போலீசாரும், அங்கிருந்த தவெக தொண்டர்களும் உடனடியாகக் கீழே விழுந்த காவலரை நோக்கி விரைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் சக்கரம் அவர் மீது ஏறுவதற்கு முன்பாகவே வாகனம் நிறுத்தப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கீழே விழுந்த காவலரைச் சக பாதுகாப்புப் படையினர் உடனடியாக மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இந்தத் திடீர் விபத்துச் சம்பவத்தால் திருச்சி ரோடு ஷோ நடைபெற்ற சாலையில் சில நிமிடங்கள் கடுமையான பதற்றமும் பரபரப்பும் நிலவியது. பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் நன்றி அறிவிப்புப் பேரணி மீண்டும் தொடர்ந்தது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.