கையில் ஒரு தடி, கால்கள் நடக்க முடியாதது போன்ற பாவனை மற்றும் முகத்தில் வறுமையின் வாட்டம் என நடுரோட்டில் நடக்க முடியாதபடி பிச்சை எடுத்து வந்த போலி பிச்சைக்காரர் ஒருவரின் சாயம், தெருநாய்களால் வெளுத்தெடுத்த சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் ஒருவர் கையில் தடியூன்றி, மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது முகபாவனையையும், நடையையும் பார்த்தால் எவ்வளவு பெரிய ஆளும் ஏமாந்து போகும் வகையில் அவரது நடிப்பு இருந்தது. அப்போது, அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென அவரைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே கடிக்கப் பாய்ந்தன.
நாய்கள் தன்னை நெருங்குவதைக் கண்ட அந்தப் போலி பிச்சைக்காரர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி கையில் இருந்த தடியை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, நடிப்பை மறந்து தன் இரண்டு கால்களாலும் மின்னல் வேகத்தில் தப்பியோடினார். ஓட்டப் பந்தய வீரர் போல அவர் சீறிப்பாய்ந்து ஓடியதை அங்கிருந்த பொதுமக்கள் வாயடைத்துப் போய் வேடிக்கை பார்த்தனர்.
இந்த ஒட்டுமொத்த கூத்தும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. “நாய்கள் கடிக்க வந்த வேகத்தில் அவரது ஒட்டுமொத்த ஊனமும் பறந்து போய்விட்டது”, “மக்களின் இரக்க உணர்வை வைத்து ஏமாற்றியவரை நாய்கள் நல்வழிப்படுத்தியுள்ளன” என்றும், “இனிமேல் இவர் பிச்சை எடுக்க வேறு ஏரியாவுக்குத்தான் போக வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை செம கலாய்ப்பு கமெண்ட்டுகளுடன் வைரலாக்கி வருகின்றனர்.