நீட் மறுதேர்வு: விண்ணப்பக் கட்டணம் மறுப்பா? NTA-வில் தொடரும் குளறுபடிகள்
க.சே.ரமணி பிரபா தேவி June 15, 2026 07:14 PM

நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பக் கட்டணம், ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவகாரங்களில் என்.டி.ஏவின் குளறுபடி தொடர்ந்து வருவதாக சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு (Admit Card) நேற்று (ஜூன் 14) இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைப் பதிவிறக்கம் செய்ய முயலும் மாணவர்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை மீண்டும் உறுதி செய்யுமாறு என்.டி.ஏ (NTA) இணையதளம் கட்டாயப்படுத்துகிறது.

அந்த இணைப்பைக் கிளிக் செய்தால், ஏற்கனவே பதிவு செய்த வங்கி விவரங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன் இருக்கும் 'Edit & Proceed' பொத்தானைக் கிளிக் செய்தால், இணையதளம் முடங்கிவிடுகிறது. பிறகு மீண்டும் உள் நுழையும்போது, "நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர விரும்பவில்லை" (You have agreed not to provide bank details) என்று தவறாகக் காட்டி, நுழைவுச்சீட்டை மட்டும் பதிவிறக்கம் செய்யும் நிலையை என்.டி.ஏ உருவாக்கியுள்ளது.

நேற்றிரவு 7 மணி முதல் இன்று அதிகாலை வரை 4 லட்சம் பேர் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ததாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோரின் வங்கி விவரங்கள் மாயமாகியுள்ளன. இதனால், தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைத் திருப்பித் தருவோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த என்.டி.ஏ, அதைத் தராமல் இருக்கவே இந்தத் திட்டமிட்ட மோசடியைச் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

  1. நுழைவுச் சீட்டுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நீக்க வேண்டும்.
  2. அனைத்து மாணவர்களும் கட்டணத்தைத் திரும்பப் பெற ஏதுவாக, வங்கி விவரங்களைப் பதிவேற்றும் வசதியைத் தனியாக வழங்க வேண்டும்.
  3. இந்த வசதியை மறுதேர்வு முடிந்த பிறகு இரண்டு வாரங்கள் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  4. இது குறித்து முறையான, வெளிப்படையான அறிவிப்பை என்.டி.ஏ வெளியிட வேண்டும்.

ஏற்கனவே தேர்வு ரத்தானதால் மன உளைச்சலிலும், அச்சத்திலும் இருக்கும் மாணவர்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள். இவ்விவகாரத்தில் உரிய தீர்வுகளை விரைந்து அளிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.