தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகள் வாங்க முடியாமல் நகைக்கடைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 வருடத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலையானது உயர பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முக்கியமாக மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை காரணமாகவும் தங்கத்தில் முதலீடானது அதிகரிக்க தொடங்கியதும் விலை உயர காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே இன்று காலை போர் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது சரசரவென குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று காலை உயர்ந்திருந்த தங்கம் விலை மாலையில் குறைந்து நகைப்பிரியர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,12,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் சரசரவென தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 13ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் காலையில் விற்பனையான கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.