ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா? இனி ரூ.10,000 அபராதம் உறுதி!
நாகராஜ் June 27, 2026 05:44 PM

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயில்களில் பயணிகளுக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. அதேபோல, பயணிகளின் பாதுகாப்புக்காக நிறைய விதிமுறைகளையும் இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே 'பொது நம்பிக்கை சட்டத்தின் கீழ் விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.


அதன்படி, ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அபராதம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காகப் பிற அபராதத் தொகைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சட்டத்தின் பிரிவு 165-ஐத் திருத்தும் 'பொது நம்பிக்கை (விதிமுறைகள் திருத்தச்) சட்டம், 2026'-இன் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில்வே சட்டத்தின் பிரிவு 165 விதிகளுக்கு முரணாக ரயிலில் ஆபத்தான அல்லது ஆட்சேபனைக்குரிய பொருட்களை எடுத்துச் செல்லும் நிகழ்வுகளைக் கையாள்கிறது. இப்பிரிவு, ரயில்வே சட்டத்தின் பிரிவு 67-ஐ மீறுவது தொடர்பானதாகும். முந்தைய விதிமுறைகளின்படி, இத்தகைய நிகழ்வுகளுக்கான அபராதம் 500 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது அது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய பொருட்களால் ஏதேனும் சேதம், காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பாவார். பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரயில்வே விதிகளைப் பின்பற்றவும், கனமான அபராதங்களைத் தவிர்க்கத் தடைசெய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்து வராமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட பிரிவு 165 அபராதத் தொகைகளை கணிசமாக உயர்த்துகிறது. இனி ரயிலில் ஆபத்தான அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது ரயில்வே மூலம் அவற்றை அனுப்பும் அனைவரும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இந்த விதிமுறையின்படி, அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்படும். மேலும், அப்பொருட்களால் ஏதேனும் சேதம், காயம் அல்லது விபத்து ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பான நபர் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்.


அதாவது, அபராதம் செலுத்துவது மட்டுமல்லாமல் சேதத்திற்கும் அவர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும். திருத்தப்பட்ட விதிமுறையின்படி அபராதங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்பு இத்தகைய நிகழ்வுகளுக்கு அதிகபட்ச அபராதம் ரூ. 500 ஆக இருந்த நிலையில், தற்போது அபராதம் 10,000 ரூபாய்க்குக் குறையாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆபத்தான பொருட்கள்!

    பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய்
    கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு
    பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள்
    அமிலங்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள்
    தீப்பெட்டிகள், சிகரெட்டுகள் மற்றும் பிற வெடிபொருட்கள்


ரயில்வே சட்டத்தின் பிரிவு 67இன் படி, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் ரயில்களில் ஆபத்தான அல்லது ஆட்சேபனைக்குரிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அத்தகைய பொருட்களை எடுத்துச் செல்ல விரும்பும் எவரும் முதலில் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியரிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதோடு, அந்த லக்கேஜில் உள்ள பொருட்கள் என்ன என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.