லால்குடி தேர்தல் வழக்கு... லீமா ரோஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Dinamaalai July 14, 2026 07:48 PM

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, இத்தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

திமுக வேட்பாளர் பாரிவள்ளல் தனது மனுவில் லீமா ரோஸ் தனது கணவரான பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பங்குதாரராக இருந்து வருகிறார். வேட்புமனுத் தாக்கலின் போது மார்ட்டினுக்குச் சொந்தமான 7 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள விவரங்களை அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் முறையாகக் குறிப்பிடாமல் திட்டமிட்டு மறைத்துள்ளார்.

தேர்தல் விதிகளின்படி உண்மைக்கு மாறான மற்றும் தவறான தகவல்களைத் தந்த லீமா ரோஸின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் பெரும் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட லீமா ரோஸ் மார்ட்டினின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, திருச்சியிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.