PM Modi CJP Protest: வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் மறுதேர்வு அறிவிப்பால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி CJP அமைப்பினர் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது தேசிய அளவில் பேசுபொருளானது கடும் கண்டனங்களும் குவிந்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடி எந்தவித கருத்தையும் சொல்லாமல் இருந்த நிலையி, மூன்று நாட்கள் கழித்து இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள்” என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விரைவு நீதிமன்றங்கள் தொடர்பான அறிவிப்பு, மாணவர்கள் போராட்டத்தை மடைமாற்றும் முயற்சியாகவே பார்க்க முடிவதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். நேர்ந்த தவறுக்கு அரசு பொறுப்பேற்க முயலாமலும், முற்றிலுமாக தங்கள் மீது தவறே இல்லை என்ற வகையில் தொடர்ந்து செயல்படுவதாகவும் சாடுகின்றனர். இளைஞர்கள் நலனே என குறிப்பிட்டுள்ள நீங்கள், அவர்கள் மீது டெல்லி போலீசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை மற்றும் அராஜகத்திற்கு கண்டனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லையே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலமே முக்கியம் என குறிப்பிட்டுவிட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைவசம் உள்ள ஒரே ஆயுதம் என கோடிக்கணக்கானோரால் நம்பப்படும் கல்வி சார்ந்த ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியாத அமைச்சரை பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதன் மூலம் உணர்த்த வருவது என்ன? எனவும் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.