சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
நாகராஜ் July 26, 2026 12:14 AM

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.


சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கேரளத்தில் ஆண்டுதோறும் கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை விவசாயம் செழித்தோங்கவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் நடத்தப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி 2-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.


தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 3-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். நிறை புத்தரிசி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.