அமெரிக்காவில் இறக்குமதி ஆடைகளுக்கான வரி விகிதம் தொடர்ந்து 10 சதவீதமாகவே நீடிக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் இடையே பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டின் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா மிக முக்கிய இடத்தைப் வகித்து வருகிறது. 2025–26 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து மொத்தம் 7.68 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மட்டும் 42,478 கோடி ரூபாய் அளவுக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவின் அபரிமிதமான வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு வரி விகிதம் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனிடையே, அமெரிக்க வர்த்தகச் சட்டப் பிரிவு 301-ன் கீழ் இந்தியப் பொருட்களுக்கான வரி விதிப்புக் கட்டணம் 10 சதவீதம் என மீண்டும் அமெரிக்கத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகப் பின்னலாடை உட்பட இந்திய ஆடைகளுக்கு இறக்குமதி வரியாக 16 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதனுடன் கூடுதலாகச் சேர்க்கப்படும் வரிக் கட்டணமும் 10 சதவீதமாகவே தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி உயர்வு எதுவுமின்றி, வழக்கமான கட்டணம் 10 சதவீதமாகவே தொடர்வதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த தெளிவுபடுத்தப்பட்ட அறிவிப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், "கடந்த ஐந்து மாதங்களாக 10 சதவீதமாக இருந்த வரி விகிதம், மீண்டும் சட்டரீதியாகத் தொடரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது திருப்பூர் வர்த்தகர்களுக்குச் சற்று நிம்மதியை அளிக்கிறது. இதன் மூலம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை, ஏற்றுமதியாளர்கள் எவ்விதப் பதற்றமும் இன்றி அமைதியாகத் தொழில் செய்ய வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.