யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
குலசேகரன் முனிரத்தினம் July 28, 2026 11:44 AM

TN Govts Montek Singh Ahluwalia: மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்க குழு முன்னெடுக்க உள்ள பணிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் வருவாய் பெருக்க குழு

தமிழ்நாடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அதேநேரம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.  இதனால் மாநில அரசின் கடன்சுமை கடுமையாக உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன்கள் மூலம் மட்டுமே நிதியளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வரி செலுத்துவோர் மீது நியாயமற்ற சுமையைச் சுமத்தாமல், அது தனது சொந்த வருவாயை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் அடங்கிய வருவாய் பெருக்க குழுவை, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைத்துள்ளது. 3 மாதங்களில் இந்த குழு வழங்க உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா?

இந்தியாவின் நவீன பொருளாதாரத்தை கட்டமைத்த முக்கிய நபராக கருதப்படும் மான்டேக் சிங் அலுவாலியா, தற்போது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் 1943ம் ஆண்டு பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் M.Phill படித்து முடித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இல்லாமல் ஒரு பொருளாதார நிபுணராக இந்திய அரசாங்க அமைப்பில் நுழைந்த மான்டேக் சிங் அலுவாலியா,  இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க சில பொருளாதார கொள்கைப் பதவிகளை வகித்துள்ளார். இந்தியாவின் நிதிச் செயலாளர், வர்த்தகச் செயலாளர், 2004ம் ஆண்டு முதல் 2014 வரை திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தின் முதல் இயக்குநர் என்பது போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். உலக வங்கியில் 11 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். இந்தியாவின் 1991 பொருளாதார சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய கொள்கை வகுக்கும் குழுவின் முக்கிய உறுப்பினராகும் இருந்துள்ளார். இந்திய அரசின் பங்களிப்பிற்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

வருவாய் பெருக்க குழுவின் வேலைகள்

அலுவாலியா தலைமையிலான குழுவானது

  • வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் கசிவுகள்
  • தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இணக்கம்
  • புதிய மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படும் வருவாய் ஆதாரங்கள்
  • பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகை
  • அரசு நிலம் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல்
  • விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் விலக்குகள்
  • பயனர் கட்டணங்கள்
  • உலக வங்கியில் 
  • மதுபான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு

போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் மாநில அரசின் சொந்த வருவாய் பெருக்கப்பட்டு, வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படுவதோடு, கடன் வாங்குவதையும் குறைக்க உதவும் என நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு

அரசு முனைப்பு காட்டுவது ஏன்?

முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000, ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர் என ஏராளமான நிதி உதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அமல்படுத்த போதிய நிதி வசதி அரசில் தற்போது இல்லை. எனவே அரசின் நிதிநிலைமையை முதலில் வலுப்படுத்த அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.