ஜூலை 29, 2026: தேர்வுத் தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஆண்டி பேப்பர் லீக் மசோதா – 2026-க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆண்டி பேப்பர் லீக் மசோதா:இதற்கு முன்னதாக, ஆண்டி பேப்பர் லீக் மசோதா தொடர்பாக மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. தேர்வுத் தாள் கசிவு, மாணவர் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மசோதாவில் உள்ள திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
மேலும் படிக்க: பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு
இதற்கிடையில், வந்தே மாதரம் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தி கருத்தால் மக்களவையில் அமளி:ஆண்டி பேப்பர் லீக் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில்தான் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். பெல்லெட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பலர் கடுமையாக காயமடைந்ததாகவும், அதற்கு அமித் ஷாவே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: “ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!”.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
மேலும், ஆண்டி பேப்பர் லீக் மசோதா தொடர்பான முக்கியமான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஏன் பங்கேற்கவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலுயுறுத்தல்:இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும், முதலில் அமித் ஷாவிடம் மன்னிப்பு கேட்ட பிறகே அவர் அவையில் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால், தனது கருத்துகளை ராகுல் காந்தி மீண்டும் நியாயப்படுத்தினார். டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், தனது கருத்தில் மாற்றமில்லை என அவர் தெரிவித்தார்.