தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வந்த தென்கொரிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Top Tamil News July 29, 2026 07:48 PM

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த ​தென் கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தாஜ்மஹாலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றன. அப்படிப்பட்ட தாஜ்மஹால் வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குரங்குகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஆக்ரா மாநகராட்சிக்குக் கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்யும் அந்த விலங்குகளைப் பிடிக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறை கோரியிருந்தது. இருந்த போதிலும், மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தாஜ்மஹாலைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த ​தென் கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குரங்கு தாக்கியதில் அப்பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தது. இருப்பினும் சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை என சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். காயமடைந்த சுற்றுலாப் பயணி மருத்துவ உதவிக்காக ஒரு மணிநேரத்துக்கு மேலாக காத்திருந்தார். பின்னர் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் அப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் பேட்டரியால் இயங்கும் வாகனம் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.