விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை வெடித்ததால் பரபரப்பு
Top Tamil News July 30, 2026 01:48 AM

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. காவல் துறை, விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் பச்சைப்பயறு தானியத்தை 100% குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயிறு விளைச்சலை 100% அரசு கொள்முதல் செய்ய வேண்டும்,உர விநியோகத்திற்கான இ டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைமையில் ஆயிரக்கணகான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தடுப்புகளை உடைத்து பேருந்தின் மீது ஏறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

விவசாயத் தலைவர் சந்தோஷ் பட்வாரி கூறுகையில், “நாங்கள் 20 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. விவசாயிகளால் தங்களது பாசிப்பயறு விளைபொருட்களை லாபகரமான விலையில் விற்க முடியவில்லை. அதனால், முதலமைச்சரின் இல்லத்திற்குச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.