நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதே நேரம் சென்னை கொருக்குப்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் உருவத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் விஜய் அவர்களின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும். புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.
எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.