‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
இராஜா சண்முகசுந்தரம் September 15, 2026 03:14 PM

நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் என்ற மிகப்பெரிய கால அவகாசம் இருக்கும் நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீபத்தில் மும்பை சென்ற கனிமொழி உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் தவெக-விடம் ஆட்சி அதிகாரத்தை இழந்திருக்கும் திமுக, 2029 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதோடு, காங்கிரஸ் செய்த துரோகத்திற்கு பழித் தீர்க்கவும் முடிவெடுத்துள்ள அந்த கட்சி, தேசிய அளவில் இப்போதே காங்கிரஸ்க்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

3வது அணியில் கரப்பான் பூச்சி கட்சி – திமுக மாஸ்டர் பிளான்

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய கையோடு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி டெல்லி சென்றதாகவும், அங்கு கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே-வை சந்தித்து பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்று கூறியிருந்தார். இதனையடுத்து தேசிய அளவில் இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள கரப்பான்பூச்சி கட்சியையும் மூன்றாவது அணியில் சேர்க்க திமுக திட்டமிட்டிருப்பதாகவும் அதனடிப்படையிலேயே கனிமொழி அபிஜித் தீப்கேவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக உருவாக்கும் மூன்றாவது அணியில் கரப்பான் பூச்சி கட்சியும் இணைந்தால், அது தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் படையை சமாளிக்கவும் திமுகவிற்கும் உதவும்.

பாஜக, காங்கிரஸ்க்கு எதிரான அணி திரட்டும் திமுக

கராப்பான் பூச்சி கட்சி மட்டுமின்றி மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, தேஜஸ்வி யாதவின் ராஸ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் மூன்றாவது அணிக்கு ஒன்றுதிரட்டும் முயற்சியில் திமுக தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதே நேரத்தில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையே கருத்து மோதல்கள் வலுத்து வருவதாக கூறப்படும் நிலையில், அடுத்த வருடம் உத்தரபிரதேசத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அப்போது ஏற்படும் கள சூழலை பொறுத்து அகிலேஷ் யாதவையும் மூன்றாவது அணிக்கும் கொண்டுவரும் திட்டமும் திமுகவிடம் இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சந்திரசேகர்ராவை சந்திக்கும் கனிமொழி ?

கடந்த 2019 தேர்தலின்போதே சந்திரசேகர்ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளை எடுத்தார். அத்தோடு அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சென்னைக்கே வந்து சந்தித்து பேசினார். ஆனால், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றுசேர்ந்து நிற்பதே சரியானதாக இருக்கும் என அப்போது மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிக்க மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் காலம் மாற்றம் ஏற்பட்டு இப்போது திமுகவே தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பாரதிய ராஷ்ட்டிர சமிதி தலைவர் சந்திரசேகர்ராவையும் கனிமொழி சந்திக்கவிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவபிரியன், மூத்த பத்திரிகையாளர்
சிவபிரியன், மூத்த பத்திரிகையாளர்

'மூன்றாது அணி என்பது தோல்வி முயற்சி’

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவபிரியனிடம் கேட்டபோது ‘தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி என்பதே ஒரு Failed Move-தான். காங்கிரஸ் இல்லாத மதசார்பற்ற கூட்டணியை பாஜகவை எதிர்க்க நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றவர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது என்றும் அவரே மூன்றாவது அணியை விமர்சித்திருக்கிறார். அப்படியான நிலையில், இப்போது திமுக முன்னெடுத்திருக்கும் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் எந்த அளவுக்கு கைக்கூடும் என தெரியவில்லை. 2009ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திரபாபு நாயுடு, இடதுசாரிகள் உள்ளிட்டோர்களை இணைத்து மேற்கொண்ட அணியும் தேர்தலுக்கு பின்னால் காணாமல்போய்விட்டது. அதனால், பாஜகவை காங்கிரஸ் இல்லாத கூட்டணியை வைத்துக்கொண்டு தேசிய அளவில் எதிர்த்து தேர்தலை சந்திப்பது என்பது சரியான நிலைபாடாக இருக்காது. அதே நேரத்தில், கரப்பான் பூச்சி கட்சியை மூன்றாவது அணியில் இணைத்தால் அது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், மாற்று அரசியலை முன்னெடுத்துவரும் கரப்பான்பூச்சி கட்சியினர் பழைய கட்சிகளுடன் சேர்வார்களா? என்ற சந்தேகமும் இருக்கிறது’ என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.