Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி? - சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. இந்தியா கூறுவதென்ன?
Vikatan September 20, 2024 04:48 PM

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர் (Sikhs for Justice) அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் இந்திய அரசாங்கம் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing - RAW) தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மீது வைக்கப்படும் சதிதிட்டக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளார், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி.

Vikram misri

"இது முற்றிலும் ஆதாரமற்றது. இந்தக் குறிப்பிட்ட வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதனால் அடிப்படை விஷயங்களைப் பற்றி எங்கள் பார்வை மாறாது. நான் உங்கள் கவனத்தை இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் நபரின் பக்கமே திருப்புகிறேன், அவருடைய முன்னோடிகள் யார் என அனைவருக்கும் தெரியும்.

அந்த நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு, சட்டத்துக்குப் புறம்பானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் தேசவிரோத மற்றும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான நவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் (Unlawful Activities Prevention Act of 1967) கீழ் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க அரசு, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா மற்றும் விக்ரம் யாதவ் ஆகிய 2 பேருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.

இதில் நிகில் குப்தா கடந்த ஆண்டே செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்க அரசின் கோரிக்கையின்படி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்றொருவரான விக்ரம் யாதவ், ரா (RAW) அதிகாரி. இவர் பன்னுன் கொலை முயற்சியின் பின்னணியில் செயல்பட்டதாகவும், இதற்கு அப்போதைய RAW தலைவர் சமந்த் கோயல் அனுமதியளித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைத் தெரிவிக்கிறது.

பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாகக் கூறுவது தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி இந்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமைப் பெற்றுள்ளார். இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் நபராக இருக்கிறார்.

Manipur: மீண்டும் வன்முறை, ஊரடங்கு; ராக்கெட், ட்ரோன் மூலம் தாக்குதல் - மணிப்பூரில் என்ன நடக்கிறது?
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.