கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, ரவுடி ஆல்வினை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கோவை கொடிசியா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம், தலைமை காவலர் ராஜீவ் குமாரை தாக்கியதில், தலைமை காவலர் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. மேலும் ரவுடி ஆல்வின் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஆல்வினை சுட்டார். இதில், ரவுடி ஆல்வின் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ரவுடி ஆல்வினையும், தலைமை காவலர் ராஜீவ் குமாரையும் போலீசார் கோவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.