இது தெரியுமா ? வயிறு நிறைய சாப்பிட்ட பின் சூயிங்கம் மெல்லுவது நல்லதாம்..!
Newstm Tamil October 19, 2024 11:48 AM

சுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் அமைதியாக அசைபோடுகிறார்கள். சிறுவர்கள் என்றால் அவ்வப்போது ஊதி பலூன் போன்று காட்டிவிட்டு பொழுதைபோக்கும் விதத்தில் மெல்லுகிறார்கள்.சுயிங்கம் அனைத்துமே சர்க்கரையை பயன்படுத்திதான் தயார் செய்யப்படுகிறது. ஆனால் அதனை சர்க்கரை நோயாளிகள் மெல்லக்கூடாது என்பதால் ‘சுகர் ப்ரி’ சுயிங்கமும் தயாராகிறது.

சுயிங்கம் உடலுக்கு சில நல்ல விஷயங்களை செய்கிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு இதனை மெல்லும்போது உமிழ்நீர் பெருமளவு சுரக்கும். அது உணவை செரிமானம் செய்ய துணைபுரியும். உமிழ் நீர் அதிக அளவில் இரைப்பைக்குள் செல்லும்போது, அங்கே சுரக்கும் தேவையற்ற அமிலங்களின் அளவு கட்டுப்படுத்தப்படும். இது இரைப்பைக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற செயலாகும்.

நமது மூளையில் நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கு தேவையான பகுதி எப்போதும் தூண்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். சுயிங்கத்தை அசைபோடுவது அவைகளின் தூண்டுதலுக்கு ஓரளவு காரணமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், விளையாட்டு வீரர்கள் களத்தில் நிற்கும்போதும் பதற்றத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் உள்ளாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் சுயிங்கத்தை அசைபோட்டால் மனம் அமைதியாகும். சுயிங்கம் மென்றால் பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேற்றப்படும். தாடை மற்றும் ஈறுகளுக்கு இது ரத்த ஓட்டம் தரும் பயிற்சியாகவும் அமையும்.

சூயிங்கம் மெல்லும்போது பலமுறை தாடையை அசைத்துக் கொண்டே இருப்பதால், தாடையில் அதிக வலி ஏற்படும். பின்பு அது தலைவலியை ஏற்படுத்தும்.தினமும் நீங்கள் சூயிங்கம் சாப்பிட்டாலோ, அல்லது நீண்ட நேரம் மென்று கொண்டிருந்தாலோ, 'டெம்போரோமண்டிபுலர் டிஸ்ஆர்டர்' (Temporomandibular Disorder) என்கிற பிரச்னை ஏற்பட்டு அதன் விளைவாக தலைவலி வரலாம்.

அதேநேரம், தாடை தொடர்ந்து அசைக்கப்படுவதால் காதுவலி வருவதற்கான வாய்ப்பு குறைவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்போதோ, மலைஉச்சிக்குப் போகும்போதோ அல்லது விமானத்தில் பறக்கும்போதோ சிலருக்கு காதுவலி ஏற்படுவதுண்டு.சூயிங்கம் மெல்லும்போது காற்றை வெளியேற்றுவதால் காது வலிக்கான வாய்ப்பு குறைகிறது. சூயிங்கத்தை மெல்வதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உமிழ்நீர் மிகக்குறைவாக சுரக்கும். அவர்களுக்கு, உமிழ்நீர் சுரக்க சூயிங்கம் பயன்படுத்துவதுண்டு.

அதே நேரத்தில் அதிக அளவு சுயிங்கம் மெல்லுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். சுயிங்கத்தில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி பல் இடுக்குகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ந்து, அதிகமாக செயல்பட்டு பற்சிதைவை உருவாக்கும். சுயிங்கத்தை குழந்தைகளோ, சிறுவர்களோ அஜாக்கிரதையாக விழுங்கிவிட்டால் சில நேரங்களில் அது உணவுக் குழாயில் ஒட்டிக்கொள்ளும். மூச்சுவிட சிரமமாகிவிடும். உலக அளவில் சில குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இது காரணமாக இருந்திருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.