மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு.. இருளில் மூழ்கிய கியூபா!
A1TamilNews October 21, 2024 02:48 AM

கியூபாவில் மின்சாரம் உற்பத்தி தடை பட்டதால் நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

கரிபீயன் கடலில் உள்ள தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டில், கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு உட்பட பல்வேறு காரணங்களால், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடுமையான மின் தட்டுப்பாடு அந்த நாட்டில் நிலவுகிறது. 

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ், தன் உற்பத்தியை நேற்று முன்தினம் நிறுத்தியது. அண்மையில்  வீசிய  மில்டன் சூறாவளி காரணமாக குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், மின்சார உற்பத்தியை தொடர முடியாமல்  மூடப்பட்டு உள்ளது. 

மின்சாரம் உற்பத்தி தடை பட்டதால் கியூபா இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 


அமெரிக்காவின் வர்த்தக தடை, ஆலைகளை இயக்குவதற்கான எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களை பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவை உற்பத்தி பாதிப்புக்கு காரணம் என கியூபா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.