நாளை மறுதினம் அக்டோபர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நாளை மறுதினம் அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது. புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும்.
இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த 'டானா' என பெயரிடப்பட்டு உள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.