உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? பார்க்கலாம்.
கூகுள், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, ஐபிஎம், அடோப் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். கூகுள் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட், ஓப்பன்ஏஐ ஆகியவற்றால் கூகுள் கடும் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கூகுளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. Perplexity உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன், தன் ஆரம்ப காலங்களை போபாலிலும் சென்னையிலும் கழித்துள்ளார். ஐஐடி சென்னையில் பட்டம் முடித்த இவர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய பிரபாகர், search ranking, ad systems மற்றும் marketplace design ஆகிய துறை சார்ந்து பணியாற்றி உள்ளார். 64 வயதான அவர், 2012ஆம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். கூகுள் கிளவுட், கூகுள் ஆப்ஸ் ஆகிய துறைகளுக்குத் தலைமை தாங்கிய பிரபாகர், ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றையும் மேலாண்மை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு கூகுள் சர்ச் பிரிவுக்கு பிரபாகர் பொறுப்பேற்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக துறை சார்ந்து இயங்கி வரும் இவர், 100-க்கும் மேற்பட ஆராய்ச்சித் தாள்களைப் பிரசுரம் செய்துள்ளார். 20 காப்புரிமைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.
கூகுளில் மூத்த துணைத் தலைவராக இருந்தவருக்கு, தற்போது தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.