அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த வாட்ஸ்அப் குழுக்கள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
மாய நிலா October 21, 2024 06:44 PM

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், 2 வாட்ஸ் அப் குழுக்களைப் புதிதாக உருவாக்க எஸ்சிஇஆர்டி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கல்விச் செயலரின் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு வகையாக ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித்துறை செயலர் வழிகாட்டுதலின்படி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என வகைப்படுத்தப்பட வேண்டும். பிறகு அவர்களை, வாட்ஸப் (whatsapp) குழுவில் இணைத்து அவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு உதவ மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குழு எப்படி செயல்படும்?

இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள 2 முதுநிலை விரிவுரையாளர் அல்லது விரிவுரையாளர்களை நியமித்து 2 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கச் செய்ய வேண்டும்.

குழுவில் ஆசிரியர்களை இணைத்த பிறகு அக்குழுவிலுள்ள ஆசிரியர்களோ அல்லது நிறுவன பொருப்பாளரோ சிறு செயல்பாடுகள், பணித்தாள்கள் மற்றும் பாடக்கற்பித்தல் சார்ந்த விவரங்களையோ குழுவில் பதிவிட வேண்டும். இச்செயல் ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பணித்திறன் மேம்படுவதற்கான தொடர் முயற்சியாகும்.

ஆர்வம் காட்டாத ஆசிரியர்களுக்கு...

இந்த செயல்பாடுகளில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் தொடர்நது ஆர்வம் காட்டாத ஆசிரியர்களை தெரிவு செய்து மீளவும் பயிற்சியில் பங்கு பெறச் செய்யும் வகையில் ஒரு பட்டியல் தயாரித்து ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்விச் செயலரின் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.