சென்னையில் போக்குவரத்து விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழி விட்டதால் கழிவுநீர் லாரியில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கேத்தரின் என்ற மாணவியும், அவரது ஆண் நண்பரும் இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர் சாலைக்கு செல்ல கலைஞர் கருணாநிதி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் சிறிது நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதி நிலை தடுமாறி கீழே விழ கல்லூரி மாணவி கேத்தரின் மீது கழிவுநீர் லாரி டயர் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் நீலாங்கரை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் லாரியை பிடித்தனர். அதை தொடர்ந்து கழிவுநீர் லாரியில் சிக்கி பலியான கல்லூரி மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவனும் மாணவியும் செல்லும் போது போக்குவரத்து விதிமுறை மீறி எதிர் திசையில் மேம்பாலத்தின் மீது வாகனம் வந்ததால் அதற்கு வழி விடும்போது விபத்து ஏற்பட்டு பலியான சம்பவ சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.