இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாக கூறப்படுகிறது. வாடகைக்கு குடியுள்ள தீபிகா திடீரென கதறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தீபிகா தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்விட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றதாகவும், உயிர் பிழைத்ததே பெரிது என கதறியபடியே தெரிவித்துள்ளார். எனக்கும் எனது கணவருக்கும் ஏதாவது உயிருக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான் என தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தீபிகா 100-க்கு கால் செய்து தெரிவித்துள்ளார் போலீசார் சம்பவ இடம் வந்ததும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாடகைக்கு வந்ததாகவும், கடந்த ஒரு ஆண்டு காலம் வாடகையை தராமல் தீபிகா இருந்து வந்ததாகவும் இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அப்பொழுது இருதரப்பையும் அழைத்து போலீசார் விசாரணை செய்ததும் தெரிய வந்தது. மேலும், முறையாக வாடகை அளிப்பதாக கூறிய ஜெயப்பிரதா மீண்டும் வாடகை அளிக்காமல் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியேறிய நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வாடகை தராமல் தனது ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்கி வருவதால் தர இயலவில்லை எனவும் தீபிகா, ஜெயப்பிரதாவிடம் போலீசார் முன்னிலையில் அப்போது தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது தீபிகா வீடியோ வெளியிட்டு தன்னையும் தன் கணவரையும் அடியாட்கள் வீட்டிற்கு வந்து மிரட்டியதாக கூறிய நிலையில் அது தொடர்பாக எவ்வித புகார் வடபழனி காவல் நிலையத்தில் அவர் இன்னும் அளிக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.