அமெரிக்காவில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தின் சியாட்டிலின் தென்கிழக்கில் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனே போலீசார் அந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சடலமாக கிடந்தனர்.
அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஒரு சிறுமி காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.
கைதான நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.