சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்த சிலர் தன்னை பிளேடால் கிழித்து விட்டதாக அலறி துடித்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் பீதியடைந்து மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மகளின் கை பிளேடால் கிழிந்து கிடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் செய்தனர். அதன்பின் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின்னர் கல்லூரி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் மாணவி கூறியபடி அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் யாரும் வரவில்லை என்பது உறுதியானது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அதாவது அந்த மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர் கடந்த சில நாட்களாக மாணவியிடம் பேசாமல் இருந்துள்ளார். பேசாமல் இருப்பதை பொறுக்க முடியாத மாணவி எப்படியாவது அவரை பேச வைத்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த மாணவி தன்னை பிளேடால் வெட்டிக் கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.