கேரள மாநிலம் பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கல்லடிக்கோடு பகுதியில் நள்ளிரவு சுமார் 11 மணிக்கு எதிரெதிர் திசையில் வந்த காரும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. அத்துடன் அதில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்த விஜேஸ், ரமேஷ், விஷ்ணு, முஹம்மது அப்சல் மற்றும் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று காருக்குள் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக சாலையிலிருந்து அகற்றினர். இந்நிலையில் கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.