கோவை மாவட்டத்திலிருந்து இன்று காலை அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக செயல்பட்டு பயணிகளை பேருந்திலிருந்து கீழே இறக்கினர்.
பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பேருந்தில் இந்து பயணிகள் வேகமாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேருந்தில் பயணிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.