தூத்துக்குடி மாவட்டத்தில், தனது வாகனத்தை இடைமறித்து கோரிக்கை வைத்த சிறுவர்களுக்கு உடனே கைப்பந்து வாங்கி கொடுத்து கனிமொழி எம்.பி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியதாழை ஊராட்சிக்கு சென்று கொண்டு இருந்த போது, கனிமொழி கருணாநிதி எம்.பியின் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இடைமறித்துள்ளனர்.
உடனே, சிறுவர்களை காண வாகனத்தை நிறுத்திய கனிமொழி கருணாநிதி, அவர்களுடன் அன்போடு உரையாடினார். சிறுவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென உரிமையோடு கனிமொழியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களை பெரியதாழை ஊராட்சியில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று கைப்பந்துகள், கைப்பந்து வலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.