பாபி தியோல் சொன்ன வார்த்தைகள்; எமோஷ்னலான சூர்யா
ttncinema October 24, 2024 09:48 PM


சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’, ‘யோலோ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் சென்னையில் நடக்கவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது படக்குழு. 

அந்த வகையில் மும்பை, டெல்லி என படக்குழு தொடர்ந்து நிறைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா, ஒரு தருணத்தில் எமோஷ்னலாக காணப்பட்டார். அதில் பாபி தியோல் மற்றும் சூர்யா இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாபி தியோல் குறித்து பேசிய, சூர்யா, “பாபி தியோல் முன்பு நிற்பதற்கு என்னுடைய முழு தைரியத்தையும் நம்பிக்கையும் கொண்டு வருவேன். அவருடைய உடல் கட்டமைப்பு அவ்வளவு வலிமையாக இருக்கும். அவருடன் உடல் ரீதியாக போட்டி போட முடியாது” என்றார். பின்பு பேசிய பாபி தியோல், “சூர்யா போன்று பண்புள்ள நடிகர்கள், உயரமாக இருக்கத் தேவையில்லை. அவர் மற்றவர்களை விட உயர்ந்து நிற்கிறார். அவருடைய நடிப்பு என்னை மிரட்டியது” என்றார். அப்போது எமோஷ்னலான சூர்யா, பாபி தியோலை கையை தொட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.