தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பல லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த நிதி நிறுவனம் மீது 40க்கும் மேற்பட்டோர் மோசடி புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.கும்பகோணம் ஐந்து தலைப்பு வய்க்கால் பகுதியில் உள்ள தனலட்சுமி நகரில் வசிப்பவர் சந்திரமோகன் (48).
இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் செல்வராஜ் நகரில் சூர்யா சிட்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் திருவிடைமருதூரை சேர்ந்த முரளி என்பவர் ரூ.7.5 லட்சம் டெபாசிட் தொகையாக முதலீடு செய்துள்ளார். தேதி வரம்பு முடிந்தும் தராததால், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் முரளி புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உரிமையாளர் சந்திரமோகனை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதேபோல் சந்திரமோகன் மேலும் பல வாடிக்கையாளர்களிடம் பல லட்சம் ரூபாய் அளவுக்கு பெரும் பணத்தை மோசடி செய்ததாக தெரிகிறது. மேலும் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் சந்திரமோகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவன மோசடியில் உரிமையாளர் சந்திரமோகன் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் இன்று பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.