'என் சாவுக்கு நீ தான் காரணம்.. நல்லா இரு'.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. கணவர் அதிரடியாக கைது!
Dinamaalai October 24, 2024 09:48 PM

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார் (28) ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அரவிந்த்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஒரு கட்டத்தில், 'நான் ஏன் சோறு போட வேண்டும்? மனைவியை 'நீ அனாதை' என்று கூறி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரவிந்த்குமாரின் மனைவி ஐஸ்வர்யா கடந்த 21ம் தேதி திருமண நிகழ்ச்சிக்காக விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தபோது தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யா, "என் இறப்புக்கு என் கணவர் மட்டுமே காரணம். அவர் எனது ஈமச் சடங்குக்கு வரக்கூடாது.  நீ நல்லா இரு" என்று வாட்ஸாப் ஆடியோ அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று மாலை ஐஸ்வர்யாவின் கணவர் அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். ஐஸ்வர்யாவின் கணவர் அரவிந்த் குமார் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.