ஆண்களுக்கு அனுமதியில்லை... பெண்களுக்கு பிரத்யேகமாக பிங்க் பூங்கா... கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்!
Dinamaalai October 25, 2024 09:48 PM

 


தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பூங்காவை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9.91 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டடம், நடுநிலைப்பள்ளி கட்டடம், பூங்காக்கள், நடைபயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

விழாவில் கனிமொழி எம்.பி., பேசும் போது, “இன்றையதினம் மகளிருக்கான பூங்காவினை திறந்து வைப்பதில் பெரும் மகழ்ச்சி அடைகிறேன். இந்த மகளிருக்கான பூங்கா என்பது பெண்களுக்கு என்று ஒரு தனி இடமாக உள்ளது. எந்தஒரு அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக பெண்களுக்காக பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடமாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து பேணக்கூடிய இடமாகவும் இந்த மகளிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 

மாணவியர்கள் வீட்டிலிருக்கும் அம்மா, அக்கா, தங்கை உட்பட அனைத்து பெண்களையும் அழைத்து வந்து பயன்பெற வேண்டும். இதே போல் மற்றொரு மகளரிருக்கான பூங்கா தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இந்த மகளிர் பூங்காவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரி ஒர்க், எம்ராய்டிங் ஒர்க், சிறுதானிய உணவு வகைகள் தயாரித்தல், ஓவியப் பயிற்சி, விளையாட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்வது, நகை செய்தல், அழகு கலைப் பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியின் ஏற்பாட்டின்பேரில் புனித சிலுவை மனையியல் கல்லூரியின் மூலமாக நடத்தப்படவுள்ளது. 

பெண்களால் இதையும் தாண்டி பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். ஆகையால், ஒவ்வொரு பெண்களும் தங்களது வாழ்க்கைத்தரம் முன்னேறுவதற்கு தேவையான ஒரு இடமாக இந்த மகளிர் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக, பெண்கள் ஒருங்கிணைந்து புதிதாக ஒரு தொழில் தொடங்குவது குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் உள்ளிட்ட தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பகிரக்கூடிய ஒரு இடமாக இந்த பூங்காவை அனைத்து மகளிர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.