அதிர்ச்சி... திருமணமான 3வது நாளில் புதுமாப்பிள்ளை மர்ம மரணம்!
Dinamaalai October 25, 2024 09:48 PM

 


திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே திருமணமான 3வது நாளில்  ஐ.டி. நிறுவன ஊழியரான புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லூர்து அந்தோணி மைக்கேல். இவருடைய மகன் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 21ம் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் மனைவியுடன் சிங்கம்பாறையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மதியம் கறி விருந்து சாப்பிட்ட அவர்கள் அதன்பின்னர் அன்றைய தினமே இரவில் இலந்தைகுளத்துக்கு திரும்பி வந்தனர்.

ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டது. உடனே அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காலையில் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் பரிதாபமாக இறந்தார்.

திருமணமான 3வது நாளில் மாமனார் வீட்டில் கறிவிருந்து சாப்பிட்ட புதுமாப்பிள்ளை ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் மர்மமான முறையில் இறந்தது குறித்து முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இறந்த ஸ்டூவர்ட் வில்லியம்சின் உடலைப் பார்த்து மனைவி, பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.