சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம்நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (52). இவரது கணவர் பாலன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் வெங்கட்ராஜ் திருமணமாகி குடும்பத்துடன் மாத்தூரில் வசித்து வருகிறார். இதனால் அமுதா தனது தாய் லட்சுமியுடன் இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து தீ மளமளவென பரவி அமுதா உடல் கருகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிலிண்டர் வெடித்ததில், வீட்டின் ஓடுகள் உடைந்தன. சத்தம் கேட்டு வெளியில் அமர்ந்திருந்த மகன்கள் வெங்கட்ராஜ், லட்சுமி ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்த அமுதாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.