நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு அக்டோபர் 31 ம் தேதி வெளியாகிறது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையாக உருவான இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாய் பல்லவியை சமூக வலைதளத்தில் சிலர் வசைபாடி வருவதுடன் அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் அளித்த நேர்காணலில், “எனக்கு வன்முறை வழியில் நம்பிக்கையில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்பட்டதைக் காட்டியிருப்பார்கள். அது பயங்கரவாதம் எனில் கொரோனா காலகட்டத்தில் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் அனைவரும் சமம்தான். ஜாதி, மதத்தால் பிரிப்பது சரியானதல்ல” எனக் கூறியிருந்தார்.. தன் பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
“எல்லா மனிதர்களும் ஒன்றுதான். அவர்களை சாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது கிடையாது என்பதைத்தான் அந்த நேர்காணலில் கூறியிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமரன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சாய் பல்லவி அந்த பழைய நேர் காணலில் குறிப்பிட்ட ஜெய் ஸ்ரீராம் விஷயத்தை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். “ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுக்கும் நீங்கள் எதற்கு ராமாயணா படத்தில் சீதா தேவியாக நடிக்க வேண்டும்”? எனக் கடுமையான வார்த்தைகளால் சாய் பல்லவியையும் அமரன் திரைப்படத்தையும் புறக்கணிக்க வேண்டும்” எனக் கூறி வருகின்றனர்.