தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் சூழலில், பண்டிகை நெருங்கி வருகிறது. ஏற்கெனவே திட்டமிட்டு, ரயிலில் டிக்கெட் போடாதவர்களும் டிக்கெட் கிடைக்காதவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறலாம்.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே, விகல்ப் என்னும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத பயணிகள், மாற்று ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் (கன்ஃபார்ம் டிக்கெட்) பெற முடியும்.
ஒரு பயணி விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்தால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் டிக்கெட்,அதே பாதையில் பயணிக்கும் வேறு ரயிலுக்கு மாற்றப்படும். அந்த ரயில் அதிகபட்சம் 12 மணி நேரம் வித்தியாசத்தில் பயணிக்கும் ரயிலாக இருக்கும். அதே பாதையில் செல்லும் ரயிலாகவும் இருக்கும்.
குறிப்பாக தீபாவளி மாதிரியான நேரங்களில், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கடைசி நேர டிக்கெட் திண்டாட்டங்களில் இருந்து விடுதலை பெற உதவும்.
மாற்று ரயிலில் டிக்கெட் இருந்தால், உடனே டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனினும் பிறகு அதை கேன்சல் செய்தால், வழக்கமான கேன்சல் செய்யப்படும் கட்டணங்கள் உண்டு என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.