இளம்பெண்ணை சேலை பிடித்து இழுத்து தள்ளிய கொடூரம்.. அதிமுக நிர்வாகி அதிரடியாக கைது!
Dinamaalai February 03, 2025 12:48 AM

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு காலை தேநீர் அருந்த அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது, நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதனும் அதே தேநீர் கடைக்கு சைக்கிளில் வந்தார். பின்னர் காசிநாதன் தனது சொந்த சைக்கிளுக்கு பதிலாக வேறு ஒருவரின் சைக்கிளை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சைக்கிளின் உரிமையாளர் காசிநாதனிடம் இது குறித்து கேட்டார்.

இதற்கு, இது எனது சைக்கிள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு மகள்களிடம் இது குறித்து கூறினார். உடனடியாக, பாதிக்கப்பட்டவரின் இரண்டு மகள்களும் காசிநாதன் வீட்டிற்குச் சென்று சைக்கிளைக் கேட்டனர்,  தங்கள் தந்தையின் சைக்கிளை மாற்றி எடுத்து வந்ததாகக் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த  காசிநாதன், அவர்கள் இளம் பெண்கள்  என்றும் பாராமல், ஆபாசமாகப் பேசினார்.

மேலும், நீதி கேட்க வந்த இரண்டு பெண்களில் ஒருவரின் சேலையை இழுத்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானப்படுத்தப்பட்ட இளம் பெண், இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரித்தபோது, இளம் பெண் பொது இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை விரைவாக கைது செய்தனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.