கடந்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. கொரோனா தொற்றுநோய் பரவலின் போது உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.
உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் அமெரிக்காவின் விலகல் உலகளாவிய சுகாதார நடவடிக்கைகளை பாதிக்கும். எனவே, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: - அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் சில தரவுகளை வழங்கி வருகிறது.
அவர்களுக்கு தகவல் தேவைப்படுவதால் நாங்கள் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறோம். நீங்கள் (பிற நாடுகளின் பிரதிநிதிகள்) அமெரிக்காவைத் தொடர்புகொண்டு, வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்.அமெரிக்கா வெளியேறுவது வெறும் நிதியைப் பற்றியது மட்டுமல்ல. எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் பிற முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களில் அமெரிக்கா இடைவெளியை எதிர்கொள்கிறது. இதனால் தொற்று நோய்கள் பற்றிய முக்கியமான தகவல்களை அமெரிக்கா தவறவிடக்கூடும்’ என்று அவர் கூறினார்.