பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்
Vikatan February 07, 2025 04:48 PM

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி  என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நாளடைவில் விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இது விமல்குமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமல்குமார்

“என்னிடம் தொடர்ந்து வழக்கம் போல நன்றாக பேசு.” என்று அவர் மாணவியை பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி விமல்குமாரிடம் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விமல்குமார் மாணவியை பழிவாங்க முடிவு செய்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு பெயர்களில் 15 போலி கணக்குகளை தொடங்கியுள்ளார்.

அந்த கணக்குகள் மூலம் மாணவி குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவு செய்து வந்தார். இதனால் மாணவியின் மனம் மிகவும் வேதனையடைந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் காவல்துறையினர் விமல்குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.