நேற்று இரவு திடீரென்று ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பவன் கல்யாண் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். பவன் கல்யாண் நீண்ட காலமாக முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதற்கு அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு முதுகு வலி மட்டும் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு முதுகுவலி அதிகரித்த நிலையில் அவர் மருத்துமவனைக்கு சென்று இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பரிசோதனையின்போது பவன் கல்யாணை சில வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மீண்டும் அடுத்தக்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நாளை ஆந்திராவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் அதில் பவன் கல்யாண் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
பவன் கல்யாண் சமீபத்தில் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார். அதன்பிறகு டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.