பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த சின்ன முறுக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு கிடங்கில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசு கிடங்கில் நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பட்டாசு ஆலைகள் மற்றும் கிடங்குகளில் அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் பாதுகாப்புத் தணிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதன்படி, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும், 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதல் என்றும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.