திருப்பதி திருமலையில் அன்னப்பிரசாதம் சாப்பிட்ட சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக நேற்று முழுவதும் செய்தி ஒன்று காட்டுத்தீ போல பரவிய நிலையில், இது குறித்து தேவதானம் விளக்கமளித்துள்ளது. சிறுவன் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இங்கு வருபவர்களுக்கு வயிராற பசியாறும் வகையில் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22 ம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசித்து வரும் மஞ்சுநாதா என்ற சிறுவன் குடும்பத்தினருடன் திருமலை மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்திலிருந்து இரவு உணவு வாங்கி சாப்பிட்டார்.
சாப்பிட்டு அங்கிருந்து வெளியே வரும்போது திடீரென மயங்கி விழுந்தான். அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்று சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்நாதாவை திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்ன். மஞ்நாதா நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தனியாக அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தான். இந்நிலையில் திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுவதில் உண்மையல்ல. தவறான செய்திகளை, தகவல்களைப் பரப்பி பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.